நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த நடிகை சீதா, இப்போது டி.வி., நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் – சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
விவாகரத்துக்கு பின் சில காலம் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்த சீதா, சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சீதாவுக்கும், டி.வி., நடிகர் சதீசுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் – மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் சீதா – சதீஷ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது.
இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில், எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன். அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை, என்று கூறியுள்ளார்.
I am not sure if I agree with it. Are you sure?