சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் இளங்கோ (வயது 26). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இளங்கோ, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அதே பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 11.30 மணியளவில் இளங்கோவின் தலையில் யாரோ கல்லைத் தூக்கி போட்டனர். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அண்ணாநகர் துணை கமிஷனர் பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர் அனந்தராமன் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர். கொலையுண்ட இளங்கோவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோவின் நண்பர்கள் யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இளங்கோ கொலையுண்ட இடம் அருகே, போக்குவரத்து சிக்னல் உள்ளது. அமைந்தகரை பகுதியில் இதுபோன்ற முக்கிய சந்திப்புகளில் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா போலீசாரின் கண்ணில் பட்டது. உடனடியாக கேமராவில் பதிவான காட்சிகளை போட்டுப்பார்த்தனர். அப்போது இளங்கோ, பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவதும், வாலிபர் ஒருவர் பெரிய கல்லை தூக்கி அவரது தலையில் போடுவதும் தத்ரூபமாக பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
கொலை செய்யப்பட்ட இளங்கோவின் உறவினர்களுக்கும் அந்த வீடியோ காட்சியை போட்டு காட்டினர். அப்போது கொலையாளி யார் என்பது அடையாளம் தெரிந்தது. அதே பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்ற வாலிபர்தான் இளங்கோவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிப்பதற்காக விடிய விடிய தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். இன்று காலையில் கதிரவனை போலீசார் கைது செய்தனர். கேமராவின் உதவியால் கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
இளங்கோவின் சொந்த ஊர் புதுவை. இவர் அமைந்தகரையில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்தான். தனது நண்பர்களை மிரட்டி, அவர்களது பணத்தில் மது வாங்கி குடிப்பது இளங்கோவின் பழக்கம்.
இதேபோல கதிரவனை மிரட்டியும், அடிக்கடி இளங்கோ மது வாங்கி குடித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கதிரவன் அவரை தீர்த்துக் கட்டியது தெரிய வந்துள்ளது.
இளங்கோவை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கதிரவன் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் ஒல்லியாக இருப்பதால், என்னை அடிக்கடி இளங்கோ சீண்டி வந்தான். தினமும் எனது பையில் இருந்து அவன் இஷ்டத்துக்கு பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவான். என்னை பார்க்கும் போதெல்லாம் தலையில் தட்டிவிட்டுச் செல்வான். இதுபோன்று ஆத்திரமூட்டும் செயல்களை தொடர்ந்து செய்து வந்தான். இதுவே அவன் மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எத்தனை நாட்கள்தான் வடிவேலுபோல உதை வாங்கிக் கொண்டிருப்பது என்று மனதுக்குள்ளே பலமுறை அழுதுள்ளேன். இதுவே என்னை கொலை செய்ய தூண்டியது. அவனுடன் என்னால் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியாது. எனவே இளங்கோ தூங்கும்போது அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி நேற்று இரவு போதையில் தூங்கியவனின் தலையில் கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்தேன். இவ்வாறு கதிரவன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.