அமெரிக்கா பக்கம் இந்தியா சாயவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மலேசியா வந்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள் அதன் தேசிய நலன்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.சர்வதேச நிதி நிறுவனங்கள் வேகமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.அவ்வாறு நடந்தால்தான் இந்தியா போன்ற வளரும் நாடுகள் உரிய முறையில் அவற்றில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.
முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் வல்லமை கொண்ட நாடாக திகழ்ந்த இந்தியா, தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் பக்கம் சாய்கிறதா என்று கேட்கப்படுகிறது. ஆனால் இந்தியா அவ்வாறு எந்த ஒரு பக்கமும் சாயவில்லை.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற அனைத்து முக்கிய வல்லரசு நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்று மன்மோகன் சிங் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.