Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாடு முழுவதும் கண்காணிப்பு; “ஏடிஎம்’ மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்

“பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்’ என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கை வரிசையை ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களை, புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, பெருமளவில், ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுத்து, அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.அத்துடன், சட்ட விரோத பணப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்கு விவரங்களையும், பணப் பரிமாற்றங்களையும் தலைநகரில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், அந்த கணக்குகளைக் கொண்டுள்ள தனி நபர்களையும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சக உயரதிகாரி இதுபற்றி கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்க, ஏ.டி.எம்.,கள் புதிய நுழைவாயிலாக உள்ளன. பயங்கரவாத செயல்களுக்கு தேவையான பணம், உள்நாட்டில் ஒரு பகுதியில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ குறிப்பிட்ட கணக்கில் செலுத்தப்படுகிறது. பின்னர் ஒரே இடத்திலோ அல்லது பல இடங்களிலோ பல தனி நபர்கள் மூலம், அந்த பணம் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதுபோன்ற கணக்கு விவரங்கள் கண்டறியப்படும் போது, அவை சட்ட விரோத தடுப்புச் சட்ட விதிமுறைகளின் கீழ் முடக்கப்படுகின்றன. ஏ.டி.எம்.,கள் மூலம் பணத்தை எடுக்கும் போது, பயங்கரவாதிகளுக்கு துணையாக செயல்படும் ஏஜன்டுகள் யார் என்பதை போலீசாரும், உளவு நிறுவனங்களும் கண்டறிவது சிரமம்.கேரளாவில் செயல்படும் வங்கி ஒன்றின் சேமிப்பு கணக்கிற்கு, அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிராவில் உள்ள பல வங்கிக் கிளைகளில் இருந்தும், 50 ஆயிரத்திற்கும் குறைவான தொகை அடுத்தடுத்து செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்தப் பணம், பல ஏ.டி.எம்.,கள் மூலம் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளன.விசாரணை நடத்திய போது, முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. தொழில் ஆரம்பிப்பதற்காகவும், வளைகுடா நாடுகளில் பலருக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தரவும் செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தந்தை மற்றும் மகன் பெயரில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வளைகுடா நாட்டில் இருந்து கணிசமான பணம் செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பணம், ஐதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்திய போது, ஆந்திராவில் நிகழ்ந்த பைப் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நபருடன் தொழில் ரீதியான தொடர்பு வைத்திருப்பவர்கள் செலுத்திய பணம் என்றும், அந்தப் பணத்தை கைதான நபரின் கூட்டாளி, ஏ.டி.எம்., மூலம் எடுத்து பயங்கரவாத செயல்களுக்கு கொடுத்துள்ள விவரமும் தெரிய வந்துள்ளது. இதுபோல ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதனால், சந்தேகத்திற்குரிய கணக்குகளை புலனாய்வுத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இவ்வாறு நிதியமைச்சக அதிகாரி கூறினார்.

பரஸ்பர நிதி முதலீட்டுக்கு “பான்’ கார்டு அவசியம் : பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், இனி கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே முதலீடு செய்தோர் மட்டுமின்றி, புதிதாக முதலீடு செய்வோரும் பான் கார்டு பெற வேண்டும் என்ற விதிமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்ட விதிகளை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாகவும், உங்களின் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் என்ற விதிமுறையின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது, 50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான தொகையை முதலீடு செய்யும் தனி நபர்கள் மட்டுமே, பான் கார்டு நம்பரை குறிப்பிட வேண்டும். இனி அனைவரும் பான்கார்டு எண் தர வேண்டும். அதுமட்டுமின்றி, குடியிருக்கும் விலாசத்திற்கான ஆதாரம், சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் போன்றவற்றையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

(நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி

ப‌டத்தொகுப்பு- விதை2விருட்சம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: