பிரபல தெலுங்கு இயக்குனர் கே. விஸ்வநாத். இவர் எடுத்த
“சங்கராபரணம்” படம் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி கரமாக ஓடியது. விருதுகளையும் குவித்தது. கமல் நடித்த “சலங்கை ஒலி”, “சிப்பிக்குள் முத்து”, “பாச வலைகள்” ஆகிய படத்தையும் டைரக்டு செய்துள்ளார். “குருதிப்புனல்”, “காக்கை சிறகினிலே”, “யாராடி நீ மோகினி” ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது. இதுபற்றி ரஜினி கூறி இருப்பதாவது:-
கே. விஸ்வநாத்தை விமான நிலையத்தில் ஒருமுறை சந்தித்தேன். “சாகரசங்கமம்” அவருடைய மெகா ஹிட் படம். நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் இயக்கும் படமொன்றில் நான் நடிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
ஆனால் எனக்கு வேறு சில படங்கள் இருந்தன. அவற்றை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் விஸ்வநாத் படத்தில் நடிக்கும் திட்டம் தள்ளிப்போனது. அதன் பிறகு அந்த படம் எடுக்கப்படாமலேயே போய் விட்டது.
விஸ்வநாத் படத்தில் நான் நடித்து இருந்தால் அவர் என்னை வேறு கோணத்தில் வித்தியாசமான ரஜினியாக காட்டி இருப்பார். என் சினிமா வாழ்க்கையில் அது முக்கியமான படமாக இருந்திருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
ரஜினி விருப்பம் பற்றி விஸ்வநாத்திடம் கேட்ட போது, ரஜினியை வைத்து படம் எடுக்க இப்போது கூட காலம் கடந்து விடவில்லை என்றார்
(மாலை நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தி)