Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மந்திரி பதவிக்காக தயாநிதி மாறன், தயாளு அம்மாளிடம் ரூ.600 கோடி கொடுத்ததாக சொல்வதை நிரூபிக்க தயாரா?; சோவுக்கு கருணாநிதி சவால்

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- “மத்திய மந்திரி பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்ததாக – நீரா ராடியா டேப் உரையாடல் செய்தி கூறுகிறதே?” என்ற ஒரு கேள்விக்கு “துக்ளக்” இதழில் பதில் எழுதும் போது “இது பற்றி, இன்னமும் எந்த விதமான உறுதியான மறுப்பும் வெளி வந்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசில், மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள “பங்கு’ பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே?.

பதில்:- பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இது போன்றதொரு செய்தி வந்த போது, அதைப் பார்த்த நான் இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்களே என்று தான் எண்ணிக் கொண்டேனே தவிர, அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள், எனவே அந்தச் செய்தியை மறுக்க வேண்டு மென்று தோன்றவில்லை.

ஆனால் இன்று அந்தச் செய்தி “துக்ளக்” இதழிலும் வெளி வந்து பதில் சொல்லப்பட்டிருப்பதைக் காணும் போது – ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுதினால் அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகி விடுமோ என்ற நப்பாசையில் தொடர்ந்து அதை எழுதி வருவதால் அந்தச் செய்தியை மறுத்திட விரும்புகிறேன்.

மந்திரி பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் 600 கோடி ரூபாய் அவரின் பாட்டியார் வாங்கினார் என்று உண்மையிலேயே ஒரு காலத்தில் எனக்கு நண்பராக இருந்த “சோ” நம்புகிறாரா? தயாநிதிமாறனுக்கு அல்ல, வேறு யாருக்காகவாவது மந்திரி பதவியை வழங்குவதற்காக தி.மு.க பணம் பெற்றதாக சோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா? ஏனென்றால் துக்ளக் பதிலில் மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது என்றும் சொல்லியிருப்பதால், இதனை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை திட்டமிட்டு “சோ” போன்ற ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?.

உண்மையிலேயே தயாநிதி மாறன் மந்திரி பதவிக்காக 600 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக துக்ளக் `சோ’வோ அல்லது அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை யாளர்களோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறார்களா?. அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி அவர்கள் இதழிலே அதனை அவர்கள் பெயரிலேயே வெளியிடட்டும். அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். “சோ” ராமசாமி, இதற்குப் பதில் சொல்வாரா?. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
(கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: