முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான்.
தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த பிரம்மா. இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன். 1916ஆம் ஆண்டு “கீசக வதம்” என்று இவர் எடுத்தப் மௌன மொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும். அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது. விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது.
நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து. அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் ஒரு பங்களாவை வாங்கி ஸ்டூடியோவாக மாற்றி அமைத்தார். “இந்தியா பிலிம் கம்பெனி” என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
இவர் முதன்முதலில் 1916ம் வருடம் மகாபாரதத்தில் இருந்து “கீசக வதம்” என்ற கதையை தேர்வு செய்து, அதே பெயரை படத்திற்கு தலைப்பாக வைத்து கீசக வதம் படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கி றார்.
இவர் எடுத்த ‘கீசக வதம்’ தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பர்மா, மலேயா, முதலிய வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது. ரூ.35ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.50ஆயிரம் வசூலித்துக் கொடுத்தது. அதாவது நடராஜ முதலியாருக்கு கிடைத்த லாபம் ரூ.15 ஆயிரம். இது அக்காலத்தில் பெரிய தொகையாகும்.திரைப்பட துறைக்கு வருவதற்குமுன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்று விட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின் மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவரின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டைபோல சுழற்றி படம் பிடிக்கும் காமிராவை இயக்கக் கற்றார். படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார் பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற் றதாகபேட்டியில் தெரிவிக்கிறா ர்.
கீசக வதத்தைத் தொடர்ந்து “திரவுபதி வஸ்திராபரணம்” என்ற படத்தை தயாரித்தார், நடராஜ முதலியார். இதுவும் மகாபாரதத்தின் ஒரு பகுதிதான். அதாவது, திரவுபதியை துச்சாதனன் துகில் உரியும் காட்சி யை மையமாகக் கொண்ட படம்.
இக்காட்சியில் நடிக்க தமிழ்ப் பெண்கள் யாரும் முன்வரவில்லை. “அம்மாடி! எங்கள் சேலையை துச்சாதனன் உருவினால் எங்கள் மானம் போய்விடும்! நாங்கள் நடிக்க மாட்டோம்” என்று ஓட்டம் பிடித்தனர். இதனால் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை திரவுபதியாக நடிக்க வைத்தார், நடராஜ முதலியார். 1918ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப்படமும் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் லவகுசா (1919), ருக்மணி சத்யபாமா (1920), மார்க்கண்டேயா (1922), மயில் ராவணா (1923) ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.
பேட்டி எடுக்கசென்றபோது சினிமா தொழிலின் ஆரம்ப காலத்தில் சாதனை புரிந்த நடராஜ முதலியார், சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து பொருளா தார ரீதியில் சிரமப்பட்டு காலமானார்.